மேகதாது: எதிர்த்து இன்று வாதிடுகிறது தமிழகம்..சுப்ரீம் கோர்ட்டில் நேரில் பார்க்கிறார் சி.வி.சண்முகம்
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்க்கும் மனு மீதான விவாதத்தில் இன்று தமிழகம் தனது வாதத்தை எடுத்து வைக்கிறது.
சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாட உள்ளார். அதை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிடவுள்ளார்.
கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
அதில் தமிழகத்துக்கு அதிகமான தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று வெளியானதால் இதை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேகதாது அணை
மேலும் தமிழகத்துக்கு அதிக அளவிலான தண்ணீர் விடவேண்டும் என்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் மட்டுமே முடியும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்துக்கு பாதிப்பில்லாத...
இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் தண்ணீர் விடுவதை மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு கண்காணிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
காவிரி நதி நீர்
இதை கிட்டத்தட்ட ஆமோதிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதம் இருந்தது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக வழக்கறிஞர் வாதிடவுள்ளார். அதை நேரில் காண சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செல்லவுள்ளார்.
தமிழக அரசு அனுமதிக்காது
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, அதிருப்தியைக் குறைக்கும் வகையில் வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட உள்ளதாக தெரிகிறது. இன்றைய வாதத்தின்போது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.