அப்ப அடுத்த ஐடி ரெய்டில் சிக்கப் போவது நாம்தானா? அதிர்ச்சியில் வெலவெலக்கும் தமிழக அமைச்சர்கள்
தமிழகத்தில் அடுத்த வருமான வரி சோதனை என்பது தங்களது வீடுகளில்தானா என வெலவெலத்து கிடக்கிறார்களாம் அமைச்சர்கள்.
Recommended Video
சென்னை: சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான அத்தனை பேரையும் வளைத்துப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக அமைச்சர்களை உள்ளுக்குள் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. ஆனால் நிச்சயம் அடுத்த ரெய்டு ஒன்று நடந்தால் நமது வீடுகளும் சிக்கும் என்கிற கலக்கத்தில் இருக்கின்றனராம் அமைச்சர்கல்.
சசிகலா உறவினர்கள், பினாமிகள் என 190 இடங்களை நாடு முழுவதும் குறி வைத்து அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. 2,000 அதிகாரிகள் பங்கேற்ற இமாலய ரெய்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த ரெய்டில் தினகரன், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் என எவருமே இலக்கு வைக்கப்படவில்லை. இது மிகப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடியாருடன் ஆலோசனை
இந்த ரெய்டு தொடர்பாக முதல்வர் எடப்பாடியாரை அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து விவாதித்தனர். அப்போது வருமான வரி சோதனை மகிழ்ச்சி அளித்தாலும் அடுத்த ரெய்டு என ஒன்று வந்தால் நம்மை நோக்கித்தான் இருக்கும் எனவும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஐபி ரிப்போர்ட்
ஏனெனில் எடப்பாடியை முதல்வராக ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஊழலற்ற அரசு நடத்தினால் என்னுடைய ஆதரவு உங்களுக்குத்தான் கடைசிவரைக்கும் என கூறியிருந்தாராம். ஆனால் மத்திய உளவுத்துறை அறிக்கையோ தொடர்ந்து எடப்பாடி அரசின் ஊழல்களை பட்டியல் போட்டு டெல்லிக்கு அனுப்புகிறதாம்.
மோடியின் வார்னிங்
சென்னைக்கு கடந்த முறை பிரதமர் மோடி வந்த போது இதை முதல்வரிடம் பிரதமர் மோடி வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன் இப்படியான ஊழல்கள் தொடர்ந்தால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் கடுமையாக கூறினாராம்.
கிலியில் அமைச்சர்கள்
இதனால் தினகரன் வகையறாக்கள் மீதான அடுத்த ரெய்டு என ஒன்று தமிழகத்தில் நடந்தால் அப்போது அமைச்சர்கள் வீடும் நிச்சயம் சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் அமைச்சர்கள் பலரும் பெரும் கிலியில் உள்ளனராம்.