வைகோ, வேல்முருகன் ரம்ஜான் வாழ்த்து!
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம் என வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். சகோதரத்துவமும் அனைத்து சமூகங்களிடையேயான ஒற்றுமை நீடித்து நிலைக்கவும் ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய ரமலான் நோன்பு நோற்றலை உன்னதமான ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் கடைப்பிடித்து, அதன் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாளாகும்.

அண்ணலார் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன், பிறர் பசி போக்கும் மனிதநேயத்துடன் அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் பாதுகாக்கும் அடித்தளம்தான் மதச்சார்பின்மையாகும். அந்த அடித்தளத்தை தகர்க்கின்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் என்ற விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு, அந்த முயற்சியை முற்றாகக் கைவிட வேண்டும்.
சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈகைத் திருநாள் எனும் ரமலான் பெருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய மக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை. இந்த கோட்பாடுகளை ஜாதி மதங்களைக் கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
உலகெங்கும் ஜாதி, மதம், இனம், கலாசாரம் எனப் பலவற்றின் பெயரால் நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளவும் பூமிப் பந்தெங்கும் மனித நேயம் மலரவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரை ஏற்போம். அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனை நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் அனைத்து சமூகங்களிடையேயான ஒற்றுமை நீடித்து நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications