வீடுகளில் கருப்புக்கொடி, மத்திய அரசு அலுவலக முடக்கம்... கொந்தளிக்கும் தமிழக அரசியல் கட்சியினர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத அரசை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் வீடுகளில் கருப்புக் கொடியேற்ற எதிர்ப்பை தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போன்று ரயில்களை ஓடவிடாமலும், மத்திய அரசு அலுவலங்களை முடக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தில் : உச்சநீதிமன்ற ஆணையை அப்பட்டமாக மீறி இருக்கிறது கர்நாடகா அரசு. இதே போன்று தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய அரசும் மறுக்கிறது. எனவே இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாடு எடுத்து சட்டசபையை மீண்டும் கூட்டி சட்டசபையில் அனைத்து கட்சியின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும். மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டும், கடந்த முறை வேண்டுகோள் விடுத்து தான் சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக கட்சிகள் அனைவரும் ஓரணியில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். தமிழகத்தில் ரயில்களை ஓட விடக்கூடாது, மத்திய அரசு அலுவலகங்களை இயங்க விடக்கூடாது என்றும் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, முதல்கட்டமாக,நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/0oOZDPT0Wf
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 29, 2018
பாமக இளைஞர் அணித் தலைவரும் தருமபுரி எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்தில் : உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு திட்ட மிட்டு துரோகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, முதல்கட்டமாக,நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு த.மா.கா தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை வஞ்சித்த இவர்களின் செயல்பாடுகளை கண்டித்து போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொள்வதாக வாசன் கூறியுள்ளார்.
இதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல்களை மட்டுமே மனதில் வைத்து மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன என்றும் மக்கள் நலனைப் பற்றி அரசுகளுக்கு அக்கறையும், பொறுப்பும் இல்லை என்றும் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.