சசி வாய்ஸ், அமைச்சர்கள் சவுண்டு, ஆளுநர் தர்பார், பாஜக சவாரி- ஜெ.க்கு பின் நடந்தேறிய பெருங்கூத்துகள்!
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடந்தேறிய கூத்துகள்தான் எத்தனை... எத்தனை!
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகம் வரலாறு காணாத பெருங்கூத்துகளை கண்டது. அதில் முக்கியமானது டூப்ளிகேட் ஜெயலலிதாவாக சசிகலா உருவெடுத்தது; வாயே திறக்காத அமைச்சர்கள் பேசுகிறேன் என கூறிக் கொண்டு உளறிக் கொட்டுவது, தமிழகத்தில் ஆளுநரின் தர்பார் ஓங்கியது, பாஜக சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது என்பதுதான் பிரதானமானவை.
ஜெயலலிதா மறைந்த பின்னர் முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். ஜெயலலிதா உடலை புதைத்த சில விநாடிகளிலேயே அதிமுக இனி எங்கள் வசம் என கொக்கரித்தார் சசிகலாவின் கணவர் நடராஜன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓரிருநாட்கள் அமைதி காத்தது சசிகலா கோஷ்டி.. அதற்கு பின்னர் தினந்தோறும் போயஸ் கார்டனில் நாடகம்..நாடகம்..

சின்னம்மா...சின்னம்மா
நாள்தோறும் போயஸ் கார்டனில் காக்கைகள் கூட்டம் அலைமோதியது.. மெல்ல மெல்ல.. அய்யோ.. சின்னம்மா.. நீங்கதான் எல்லாமே என குரல் உயர்ந்தது.

ஒப்பாரி ஓலம்
இந்த குரலின் உச்சமாக சின்னம்மா... சின்னம்மா என ஒப்பாரி வைத்து நீங்களே கட்சி, ஆட்சி நடத்துங்கள் என்றார்.. அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை கட்சியின் பொதுச்செயலராக நியமித்து அசிங்கத்தை தேடிக் கொண்டது.

சசிகலாவின் குரல்
அப்புறம் என்ன? நடை உடை மாற்றி தன்னை டூப்ளிகேட் ஜெயலலிதாவாக்கிக் கொண்டார் சசிகலா. ஆம் சசிகலா எனும் பின்னிருந்து இயக்கும் குரலை தமிழகம் அப்போதுதான் முதல் முறையாக கேட்டது.

சமாதி அரசியல்
தலைக்கு மேலே சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு கத்தி தொங்குவதைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட தீவிரம் காட்டினார் சசிகலா. ஆனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்துவதாக கூறி சமாதி அரசியலுக்கு வித்திட்டார்.

சமாதியில் சபதம்
அந்த நள்ளிரவில் சசிகலா ஆக்ரோஷமும் ஆவேசமுமாக செய்தியாளர்களிடம் பேசிய வேகத்தை தமிழகம் பார்த்து பதறியது. பின்னர் கூவத்தூர் கூத்து.. சசிகலா ஜெயிலுக்குப் போகும் முன் ஜெயலலிதாவை சமாதியில் சபதம் என்ற பெயரில் மூனு அடி அடித்து விட்டுப் போனார்.

தனிகோஷ்டியாக சசிகலா
அத்துடன் தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக்கினார்.. வாய் சவடால் தினகரனையும் வாருங்கள் என வரவேற்றது. அதன்பின்னர் முதல்வர் நாற்காலியில் கெட்டியாக அமர்ந்த ஈபிஎஸ் விஸ்வரூபம் காட்ட அதிமுக உடைந்து இணைந்து. இப்போது சசிகலா கோஷ்டி தனி ஆவர்த்தனம் வாசிக்கிறது.

நெட்டிசன்கள் தர்பார்
ஜெயலலிதா இருந்த போது அவரை காரின் டயர்களை மட்டுமே கும்பிட்டுக் கொண்டிருந்த அமைச்சர்கள் கோஷ்டி, எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக அவரது மறைவுக்குப் பின்னர் பேச ஆரம்பித்தனர். இதன்விளைவு எல்லா அமைச்சர்களுக்கும் நெட்டிசன்கள் டிசைன் டிசைனாக பட்டம் அளித்து மகுடம் சூட்டி நாள்தோறும் அதகளப்படுத்தி வருகின்றனர். அப்படி உளறல்களின் ஒன்றுபட்ட குரலாக இருக்கிறது அமைச்சரவை.

தீபா மாதவன்
இவை போதாதென அரசியலில் நையாண்டி தர்பார் நடத்த தீபா, மாதவன்.. கணவன் மனைவி சண்டைக்கெல்லாம் கட்சி தொடங்கி காரி துப்ப வைத்த கைங்கர்யத்தை செய்த காமெடியாளர்கள் இவர்கள். இது போதாதென்று பொறுப்பு ஆளுநரை வைத்தே தமிழகத்தை ஓராண்டு வதைத்துப் பார்த்தது மத்திய அரசு.,

பாஜக சவடால்
சரி எல்லாம் முடிந்தது... புதிய ஆளுநர் வந்தார். அவரோ ஆட்சியின் லகானை தனது கையில் எடுத்துக் கொண்டு தனியே தர்பார் நடத்தத் தொடங்கிவிட்டார். முதுகெலும்பே இல்லாத அதிமுக நடத்தும் அரசின் முதுகில் ஏறி சவாரி செய்வதாக கனவு கண்டு கொண்டிருக்கிறது பாஜக. கடந்த ஓராண்டில் பாஜக பேசிய பேச்சுகளையும் ஆடி வரும் ஆட்டங்களையும் நினைத்துப் பார்த்தாலே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை திரும்ப திரும்ப சொல்ல வைக்கிறது. மொத்தத்தில் இப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்ந்திருப்பார்.. அப்படி நாறிப் போய்க் கிடக்கிறது அக்கட்சி!












Click it and Unblock the Notifications