கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பின் களைகட்டப் போகிறதா தமிழக அரசியல்?
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களைகட்ட இருக்கிறதாம்.
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு தமிழக அரசியல் களைகட்டக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் ஓய்வுகளால் தமிழக அரசியல் களம் குழம்பிய குட்டையாக இருக்கிறது. இதில் மீன்பிடித்துவிடலாம் என புதிய புதிய கொக்குகள் இலவு காத்து கொண்டிருக்கின்றன.
அதிமுகவைப் பொறுத்தவரையில் டெல்லி கண்ணசைவில் காலத்தை கடத்தி வருகிறது. இந்த தேனிலவுக்கான காலம் முடிந்து போன ஒன்றாகிவிட்டது.
வெளியே கசியவிடப்பட்ட விவகாரம்
இதனால்தான் டெல்லி பிரதிநிதியின் தலையை உருட்டும் விவகாரத்தை உலவிவிட்டிருக்கிறார்கள். இதன் எதிர்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணராமல் இருக்கமாட்டார்கள்.
விரக்தியின் உச்சத்தில் பாஜக
கர்நாடகா சட்டசபை தேர்தல் அனல் தணிந்த பின் தமிழக அரசியல் களம் அக்னிவெயிலாக தகிக்கக் காத்திருக்கிறது என்பதுதான் டெல்லி தகவல்கள். பாஜகவைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்தும் வேர்பிடிக்க முடியாத மாநிலம் தமிழகமாக இருக்கிறதே என்கிற விரக்தியின் உச்சியில் இருக்கிறது பாஜக.
நாடக முகமூடிகள்
அதிகாரத்தை கைப்பற்றுகிறோமா இல்லையோ ஒரு ஆட்டம் ஆடித்தான் பார்ப்போம் என்பதில் பாஜக உறுதியாகவே இருக்கிறதாம். ஆட்சி அதிகாரத்தின் இருந்த இத்தனை காலமும் தமிழகத்துக்கு துரோகத்தை மட்டுமே செய்த பாஜக அடுத்த 'தூய்மைவாதிகள்' 'ஊழல் எதிரிகள்' என்கிற ஓரங்க நாடகத்தை அரங்கேற்ற தயாராகிக் கொண்டிருக்கிறது.
தூய்மைவாதிகள் நாடகம்
மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் ஆட்சியாளர்கள் மீது கை வைக்கும் போது தங்கள் மீது நம்பிக்கை வரும் என நினைக்கிறது பாஜக. அதே காலகட்டத்தில் தமது ஸ்லீப்பர் செல்களை தீவிரமாக களமிறக்கி தமிழகத்தின் உரிமைகளுக்கு போராட வைப்பது; அவர்கள் கோரிக்கைளை ஏற்று ஒருசில நல்லவற்றை தமிழகத்துக்கு செய்வது என புதிய முகமூடியுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது பாஜக.
திமுகவிலும் சடுகுடு
வரலாற்று எதிரியான திமுக சிதைப்பது என்பதும் பாஜகவின் அஜெண்டாவின் ஒன்றாக இருக்குமாம். ஏற்கனவே தப்பி ஓட சில தலைவர்கள் திமுகவில் தயாராக இருக்கிறார்கள். என்னதான் திமுகவே சரணாகதி அடைந்தாலும் அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதும் அளவுக்கு சிதைப்பது என சினத்துடன் இருக்கிறதாம் பாஜக.
ஆடுபுலி ஆட்டம் ரெடி!