பிரவீண்குமார் மாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்
தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாருக்கு பதிலாக சந்தீப் சக்சேனா இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தீப் சக்சேனா தமிழக வேளாண் துறை முதன்மைச் செயலராக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
சந்தீப் சக்சேனா வகித்துவந்த வேளாண் துறை முதன்மைச் செயலர் பதவிக்கு வேறு யார் நியமிக்கப்படுவார் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரவீன் குமாருக்கு பதில்
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள், கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தியவர் பிரவீன்குமார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் குற்றத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை பிரவீன்குமார் எடுத்தார்.
வழக்குத் தொடர உத்தரவு
ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மட்டும் அல்ல, ஓட்டுபோடுவதற்கு பணம் வாங்கியவர்கள் மீதும் வழக்கு போட உத்தரவிட்டார். தேர்தல் காலத்தில் பணத்தை கொண்டு செல்வதில் பல்வேறு கெடுபிடிகளைக் கொண்டு வந்து அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
144 உத்தரவால் அதிருப்தி
இந்த நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவை பிரவீன்குமார் பிறப்பித்தார். இது ஆளும் கட்சியினருக்கு சாதகமாக இருந்ததாக குற்றம்சாட்டி, மற்ற அனைத்து கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன.
விடுவிக்க கோரிக்கை
இது பிரவீன்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எனவே லோக்சபா தேர்தல் முடிந்ததும், தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனிடம் பிரவீன்குமார் கேட்டுக்கொண்டார்.
சந்தீப் சக்சேனா
வேறு பதவிக்கு செல்ல விரும்புவதாக பிரவீன்குமார் கூறினார். இதனையடுத்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனாவை இந்திய தேர்தல் ஆணயம் நியமித்துள்ளது.