அப்பாடா! ரூபாய் நோட்டு... மத்திய அரசுக்கு எதிராக ஒருவழியாக வாய் திறந்த தமிழக அரசு!
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கூட்டுறவு வங்கிகள் முடங்கிப் போய்விட்டதாக மத்திய அரசு மீது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
500, 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகளை வங்கிகள், கிராமப்புற வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது ரிசர்வ் வங்கி. ஆனால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் இந்த செல்லாத நோட்டுகளை வாங்க அனுமதிக்கவில்லை.
இதனால் கிராமப்புற ஏழை விவசாயிகள் ஒரு வாரமாக வங்கிகளுக்கு சென்று ஏமாந்து திரும்பிவிட்டனர். அத்துடன் தொடக்க கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முற்றாக முடங்கிப் போனது. இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
மவுனியாக...
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது. நமது ஒன் இந்தியா தமிழ் இணையத்திலும் நேற்று இது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது.
செல்லூர் ராஜூ
இதனிடையே கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
முடங்கிய கூட்டுறவு சங்கங்கள்
500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு மதிப்பில்லை என மத்திய அரசு அறிவித்ததால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கூட்டுறவுத்துறை முடங்கிவிட்டது. ரூ6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
உணவு உற்பத்தி பாதிப்பு
இதனால் தமிழகத்தில் உணவு உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
4,477 வங்கிகள்
தமிழகத்தில் உள்ள 4, 477 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளன.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.