மதுரையிலா? பெருந்துறையா? தத்தளிக்க விடுகிறது எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவித்தாலும் எங்கே வரப்போகிறது என்பதில் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவித்தாலும் எங்கே வரப்போகிறது என்பதில் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் பதினைந்து மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும். தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுட்ம' எனக் கோரியிருந்தார். இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தது.
இதற்குப் பதில் அளித்த தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மதுரை, ஈரோடு, தஞ்சை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து இடங்களைத் தேர்வு செய்து அனுப்பினோம். அவற்றை மத்திய குழுவினர் பார்வையிட்டு எந்த இடத்தில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அரசின் பதில்களை ஆராய்ந்த நீதியரசர்கள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக மாநில அரசு பரிந்துரைத்துள்ள இடங்களை மத்திய அரசின் துணைக் குழு 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனை, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் பரிசீலித்து 01.01.2018-ல் அறிவிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக இதனை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இல. கணேசன் பேட்டிய்டால் சர்ச்சை
இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் வேகமடைந்து வருகின்றன. இந்நிலையில், மதுரையில் பேட்டியளித்த பா.ஜ.க எம்.பி இல.கணேசன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புகள் அதிகமுள்ளதாக மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்தாக கூறினார். எனினும் மாநில அரசு தெரிவிக்கும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நட்டா கூறினார் எனப் பேட்டியளித்தார்.
கொந்தளிப்பில் மேற்கு மண்டலம்
இல.கணேசனின் இந்தக் கருத்துக்கள் மேற்கு மண்டலத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய மேற்கு மண்டல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், மேற்கு மண்டலத்துக்குத் தேவையான மத்திய திட்டங்களை எடப்பாடி அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு அமைப்பது என்று இதுவரை மத்திய அரசு முடிவு செய்யாதபோது, மாநில அரசின் விருப்பதிற்கேற்ப அமைக்கப்படும் என்று கூறியிருக்கும்போது பா.ஜ.கவின் மூத்த தலைவர், மதுரைக்கு வரும் என்று தன் சுய முயற்சியை வெளிகாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நோய்வாய்ப்படுதல் அதிகம்
இது மேற்கு மண்டலத்தின் பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவிருக்கும் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகும். திருப்பூர் சாயப்பட்டறைகள், நீர் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கு மண்டலத்தில்தான் மக்கள் அதிகமாக நோய்வாய்ப்படுகிறார்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
நம்பிக்கை இருக்கிறது
தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்து இங்கே குடியேறி இருக்கிறார்கள். இன்றைக்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக மேற்கு மண்டல மாவட்டங்களில்தான் பரவி இருக்கிறது என்ற அரசாங்கத்தின் புள்ளி விவரங்களே சாட்சியாக உள்ளது. எனவே, மேற்கு மண்டலத்திற்கு இன்னும் உயர்நிலை மருத்துவ வசதி தேவை என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இதனைப் புரிந்து கொண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர வேண்டும். இந்த பகுதியில் இருந்துதான் அதிகமான வரி வருவாய் மாநில அரசுக்குச் செல்கிறது. இதனை உணர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஆதங்கத்தோடு.