2 கட்சிகள்.. சில செல்போன்கள்..செம ஜாலி காட்சிகள்!
சென்னை: கூட்டணிக்காக பல கட்சிகள் மாய்ந்து மாய்ந்து பேசுவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் பரபரப்பாக பத்து பேர் ஓடிக் கொண்டிருக்கும்போது சிலர் மட்டும் ஜா்லியாக உட்கார்ந்திருப்பார்கள் பாருங்கள்... அது போல தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் செம ஜாலியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டணி பற்றி அவர்களிடம் கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ இல்லையாம். காரணம், எப்படி ஆனாலும் என்ன நடக்கும் என்பதை அவர்கள் ஓரளவு ஊகித்து விட்டதால்.
அதை விட முக்கியமானது, கூட்டணி தொடர்பான பேச்சுக்களில் இவர்களை கட்சி மேலிடம் ஈடுபடுத்தவில்லை. அதுதொடர்பான பேச்சுக்கள் குறித்தும் இவர்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லையாம். இதனால் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் பாட்டுக்கு ஜாலியாக உள்ளனராம்.
முதல்ல திமுக போச்சு
ஆரம்பத்திலிருந்து கூட்டணிக் கட்சியாக திமுக இருந்து வந்தது. பின்னர் அந்தக் கட்சி போய் விட்டது. அப்போதே பாதி அனாதரவு நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது.
அதிமுக பக்கமும் போக முடியாது
சரி, அதிமுக பக்கம் போகலாமா என்று பார்த்தால், அதிமுகவோ, காங்கிரஸை சுத்தமாக விரும்பவில்லை. அந்த வாய்ப்பும் பணால்..
தேமுதிகவை இழுக்க முயற்சி
இதனால் வேறு வழியில்லாமல் தேமுதிகவையாவது கூட்டணிக்குள் இழுக்கலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதற்கான முயற்சிகளிலும் அது ஈடுபட்டுள்ளதாம்.
ஏற்கனவே திமுக - பாஜக
ஏற்கனவே தேமுதிகவை இழுக்க திமுகவும், பாஜகவும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இதில் ,தற்போது காங்கிரஸும் சேர்ந்துள்ளதாம்.
போணியாகாத 'உளுந்தூர்' வடை.!.
உளுந்தூர்ப்பேட்டை கூட்டத்தில் முடிவைச் சொல்வேன் என்று சொல்லிச் சொல்லியே அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டதால் விஜயகாந்த் மீது திமுகவும் சரி, பாஜகவும் சரி செம காண்டாக உள்ளன. இனி அவரே ஏதாவது சொல்லட்டும் என்ற நிலைக்கு வந்து விட்டன இந்த இரு கட்சிகளும்.
இந்த கேப்பில் புகுரலாமா..
எனவே இந்த கேப்பில் உள்ளே புகுந்து தேமுதிகவை இழுக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறதாம்.
டெல்லியிலிருந்தபடி பேச்சுவார்த்தை
இதையடுத்து டெல்லியிலிருந்து அகமது படேல், முகுல் வாஸ்னிக், குலாம் நபி ஆசாத் ஆகியோர் போன் மூலம் தேமுதிகவை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனராம்.
மச்சானுடன் பேச்சு
விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷுடன் அவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார்களாம்.
தமிழகத் தலைவர்களுக்கு எதுவுமே தெரியாதாம்
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதுவுமே தெரியாதாம். அதுகுறித்து மேலிடத் தலைவர்கள் தெரிவிப்பதும் இல்லையாம்.
மேல இருக்கிறவன் பார்த்துப்பான்
பார்த்தார்கள் தமிழக காங்கிரஸார்.. எனவே கூட்டணி குறித்துக் கவலையே படாமல் அவர்கள் பாட்டுக்கு ஜம்மென்று இருக்கிறார்கள். எல்லாம் மேலிடம் பார்த்துக் கொள்ளும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
காங்கிரஸ் - எவ்வளவு சவுகரியமான கட்சி பாருங்க...!