யாரென்று தெரிகிறதா? - முட்டி மோதும் ஈவிகேஎஸ் இளங்கோவன் - திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் இருந்தாலும் முன்னாள் இன்னாள் தலைவர்களிடையேதான் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. திருநாவுக்கரசர் ஈவிகேஎஸ்இளங்கோவன் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.
சென்னை: சத்தியமூர்த்தி பவனா? சண்டை பவனா என்று கேட்கும் அளவிற்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் சட்டைகள் கிழிக்கப்பட்டு சண்டை நடந்துள்ளது. இப்போது கட்சியின் முன்னாள்
தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.
இதுநாள்வரை திருநாவுக்கரசரை வசை பாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இப்போது அவர் யாரென்றே தெரியாது என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். என்னை யாரென்று தெரியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது நல்லதுதான் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அரசியல் கட்சித்தலைவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசர், வெள்ளையறிக்கை கேட்பதால் மட்டும் ஜெயலலிதா திரும்ப வந்து விடப்போவதில்லை என்று கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்
திருநாவுக்கரசரின் இந்தக் கருத்துக்கு மறுநாளே கடும் கண்டனம் தெரிவித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை தேவையில்லை என திருநாவுக்கரசர் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்றார். ராஜீவ் காந்தி கொலை பற்றியும் கருத்து கூறினார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
இதற்கு பதிலளித்த திருநாவுக்கரசரோ, ஜெயலலிதாவின் மரணத்தை ராஜீவ் காந்தி கொலையோடு ஒப்பிட்டு பேசியுள்ளனர். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இப்படி பேசியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும் என கடுமையாக கூறினார்.
திடமான மனநிலையா?
உடனே ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராக இருந்திருப்பேன் என அவர் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன் என சிந்திப்பதுதான் திடமான மனநிலையா? என்று காட்டமாக பதில் கூறினார்.
செயற்குழு கூட்டத்தில் மோதல்
கடந்த ஜனவரி மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தில் திருநாவுக்கரசர், இளங்கோவன் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்தது. கூட்டணி பேச்சு பற்றிய கருத்துக்கு இருவருமே காரசார கருத்துக்களை முன்வைத்தனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போதும் திருநாவுக்கரசருக்கு எதிரான கருத்தையே கூறினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அவர் யரென்றே தெரியாது
சில வாரங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்ற நிலையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருநாவுக்கரசர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டு சென்றார். இதற்கு அவருடன் இருந்தவர்கள் சிரித்தனர்.
என்னை திட்ட முடியாது
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், என்னைத் தெரியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது நல்லது தான். என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும் என்று கூறியுள்ளார். முன்னாள் இன்னாள் தலைவர்கள் இடையேயான மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.