மார்ச் 3 முதல் மீண்டும் பஸ் ஸ்டிரைக்: அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் அறிவிப்பு
சென்னை: 12வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் வரும் மார்ச் 3ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்து முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பல்லவன் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவற்கான தேதியை அரசு பிப்ரவரி 16ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை குறித்த தேதி எதையும் அரசு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை சென்னை பல்லவன் சாலையில் இருக்கும் போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனில் மார்ச் 3ம் தேதி அல்லது அதன் பின்னர் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த நோட்டீஸ் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாநகர போக்குவரத்து கழக இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது.