வெயிலடிக்குதேன்னு வெளியே குடை இல்லாம போகாதீங்க..ஜில்லுன்னு மழை பெய்யுமாம்..உங்க ஊர் இருக்கா?
சென்னை: கோடை காலத்தில் சுள்ளுன்னு வெயில் அடிக்கிறதே என்று நம்பி வெளியே கிளம்பி விடாதீர்கள். ஜில்லென்று கோடை மழை இடி மின்னலுடன் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 24 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலையில் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், ராமநாதபுரம், லட்சுமி மில்ஸ், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடை மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதே போல தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. அதனைப் பார்த்து பல மாவட்ட மக்களும் எங்கள் ஊருக்கு மழை வருமா? வெப்பம் தணியுமா என்று ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

அவர்களின் மன வாட்டத்தை போக்கும் வகையில் கோடை வெயிலுக்கு இதமான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications