தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள்... கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து வருகிறது.
மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக வந்தவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதற்காக கூடுதல் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் குறைந்த தூரம் கொண்ட ஊர்களுக்கு மக்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் செல்வர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 18-ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் இன்று கோயம்பேடு- வடபழனி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நெரிசலால் அன்றாடம் பணிகளுக்காக செல்பவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.