ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு- தேர்ச்சி 5% கூட எட்டவில்லை
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5%ஐ கூட எட்டவில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17-ந் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் ஆகஸ்ட் 18-ந் தேதி தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் www.trb.tn.nic.in அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் தாள் ஒன்றினை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரும், தாள் இரண்டினை 4 லட்சத்து 311 பேரும் எழுதினர்.

தாள் ஒன்றில் 4.80% தேர்ச்சி
இதில் தாள் ஒன்று தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 60% மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை 12 ஆயிரத்து 596 பேர் பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 4.80% . இதில் ஆண்களின் தேர்ச்சி 4.56%, பெண்களின் தேர்ச்சி 4.88%.

மொழிப்பாடத்தில்..
மொழிப் பாடங்களைப் பொறுத்தவரையில், தாள் ஒன்றில் தமிழ் மொழியில் 12 ஆயிரத்து 433 பேரும், தெலுங்கில் 106 பேரும், மலையாளத்தில் 20 பேரும், உருதுவில் 23 பேரும், கன்னடத்தில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாள் 2-ல் 3.62% தேர்ச்சி
தாள் 2-ல் 60%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 14 ஆயிரத்து 496 பேர். தேர்ச்சி சதவீதம் 3.62.%.

தாள் 2-ல் ஆண்கள் அதிகம் தேர்ச்சி
தாள் ஒன்றில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் 2ஐப் பொறுத்தவரையில் ஆண்களே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 4.16 ஆக உள்ளது. பெண்கள் 3.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாள் 2 மொழிப்பாடத்தில்..
தாள் இரண்டில் தமிழ் மொழியில் 14 ஆயிரத்து 363 பேரும், தெலுங்கில் 107 பேரும், மலையாளத்தில் 10 பேரும், உருதுவில் 6 பேரும், கன்னடத்தில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications