கொள்கைக்கார திருச்சி சிவாவுக்கும் 'கொலைகார' முகமா? பகீர் தகவல்களை சொல்லும் மகன் சூர்யா சிவா
மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து மகன் குடும்பத்தை பிரிக்க சதி செய்வதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவா.
சென்னை: மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து தமது காதல் திருமண வாழ்க்கையை சீர்குலைக்க சதி செய்வதாக திமுக எம்.பி. திருச்சி சிவா மீது அவரது மகன் சூர்யா சிவா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
திமுக ராஜ்யசபா எம்.பி.யான திருச்சி சிவா, திராவிடர் இயக்க கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஜாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து மேடைகளில் பேசுகிறவர்.
அண்மைக்காலமாக திருச்சி சிவாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வலம் வருகின்றன. அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
சர்ச்சை சிவா
இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த சம்பவமும் நடந்தேறியது. ஆனாலும் திருச்சி சிவா கொள்கைபிடிப்புள்ளவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையையும் திமுக மேலிடம் மேற்கொள்ளவில்லை.
மகன் குடும்பம் குற்றச்சாட்டு
தற்போது டெல்லியில் திமுக விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் வகையில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி சிவா மீது அவரது மகன் சூர்யா சிவா, மருமகள் பிரதியூஷா ஆகியோர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
ஏற்க மறுக்கும் தந்தை
திருச்சியில் சூர்யா சிவா நேற்று அளித்த பேட்டி: 2013-ம் ஆண்டு நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதை உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டபோதும் தந்தை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மனைவிக்கு கொலை மிரட்டல்
தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார். ஆனால் என் தந்தை ஜாதிவெறியோடு என்னையும் மனைவியையும் பிரிக்க வேண்டும் என துடிக்கிறார். இதனால் மனைவி பிரதியூஷாவுக்கு மர்ம நபர்கள் மூலம் போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
மனைவி நடத்தை குறித்து...
மனைவியை பிரிந்து வெளிநாட்டில் செட்டிலாகுமாறு என்னையும் என் தந்தை வலியுறுத்துகிறார். இத்தனைக்கும் என் தந்தை ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர். ஆனால் என்னை சொந்த ஜாதியில் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறார். என் மனைவியின் நடத்தை குறித்து மோசமான கட்டுக் கதைகளையும் பரப்பி வருகிறார் என் தந்தை.
எல்லாமும் ஏமாற்று வேலை
என் மனைவியின் குடும்பம் வசதியானது. அவர் சொத்துக்காக என்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளைவில்லை. மேடைகளில் ஜாதி மறுப்பு பற்றி பேசும் என் தந்தையின் நிஜமுகம் இதுதான்.. எல்லாம் ஏமாற்று வேலை.
இவ்வாறு சூர்யா சிவா கொந்தளித்தார்.