திருச்சியில் விலையில்லா மடிக்கணினி வழங்க மாணவர்கள் சாலை மறியல்
திருச்சி: திருச்சியில் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2013 -14 ஆம் ஆண்டு படித்த பிளஸ்-2 வகுப்பு மாணவர்களில் 26 பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதையடுத்து விடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.விடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் விடுபட்ட 26 மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ கூறியதை அடுத்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும் இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பில் உள்ள பள்ளியின் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். விடுபட்ட 26 மாணவர்களுக்கும் உடனே மடிக்கணினி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இன்னும் குறிப்பிட்ட தினங்களில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications