காவிரி: திருச்சியில் இரவில் திடீரென போராட்டத்தில் குதித்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது!
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் புரட்சியைப் போல சென்னை அண்ணாசாலை புரட்சியும் காவிரிக்காக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி உழவர்சந்தை பாலத்தில் இன்று இரவு 9 மணி அளவில் திடீரென 15 நிமிடங்களில் மாணவர்கள் 500க்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர். இதே இடத்தில்தான் திருச்சியின் வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் ஜல்லிக்கட்டுப் புரட்சியும் நடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நூற்றுக்கணக்கானோர் போராட்ட இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து மாணவர்களை அகற்ற போலீசார் முயற்சித்தனர். ஆனால் தங்களது போராட்டத்தைக் கைவிட முடியாது என மாணவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவர்கள் அணி அணியாக வந்து இதே இடத்தில் போராட்டத்தை நடத்திவிடக் கூடாது என்பதற்காக அங்கு திரண்டிருந்த மாணவர்களை விரட்டியடித்தது போலீஸ்.
அத்துடன் அப்பகுதியை போலீசார் சீல் வைத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் போலீஸ்.