சிறை வாசலில் வைத்து இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த கைதியின் மனைவி!
திருச்சி : திருச்சி மத்திய சிறை வாசலில்வைத்து குளித்தலை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் என்பவரை ஒரு கைதியின் மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தமிழ்ச்சோலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). இவர் திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ராமச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமச்சந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதற்கிடையில் சிறையில் இருந்த ராமச்சந்திரனுக்கு ஜாமீன் கிடைத்து நேற்று முன்தினம் வெளியில் வர இருந்தார். இதனால் அவர் வெளியில் வந்ததும் மீண்டும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதன்படி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் சிறை வாசலில் தயாராக நின்றனர்.
அதே நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வரும் மகேந்திரனை அழைத்து செல்ல அவரது மனைவி செல்வியும் சிறை வாசலில் நின்றிருந்தார். அப்போது சிறையில் இருந்து வெளியில் வந்த ராமச்சந்திரன் போலீசார் நிற்பதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்ற போலீசார் மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.
அப்போது ராமச்சந்திரனின் மனைவி செல்வி போலீஸ் ஜீப்பை மறித்து நின்றார். ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கீழே இறங்கி செல்வியிடம் வழி விடுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வி தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி இன்ஸ்பெக்டரை அடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் இன்ஸ்பெக்டர் அதைத் தடுத்து விட்டார். பின்னர் ஜீப்பில் ஏறி வேகமாக சென்று விட்டார்.
இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் அப்பெண், இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்தார் என்று தெரியவில்லை.