மணப்பாறை: 11-ம் வகுப்பு மாணவிக்கு 14 இடங்களில் கத்தி குத்து-தப்பிய நபர் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 11-ம் வகுப்பு மாணவியை முன்விரோதத்தால் 14 இடங்களில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரான கேசவன் என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்த மாணவி, திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு முடிந்து நடந்து சென்ற போது திருச்சி ரயில்ரோடு மேம்பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அந்த மாணவியின் கழுத்து உட்பட 14 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பள்ளி மாணவி 14 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை பொத்தமேட்டுப்பபட்டி பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனால் கேசவன் மீது போலீசில் மாணவி புகார் கொடுத்தார். இதனையடுத்து கேசவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த கேசவன் முன்விரோதம் காரணமாக மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து கேசவனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் கீழபூசாரிப்பட்டி ரயில்வே கேட் அருகில் சுமார் 500 மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உடல், மணப்பாறை காவல்துறையினரால் +1 மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி தேடப்பட்டு வந்த கேசவன் தான் என்பது தெரியவந்தது.

கேசவனின் தந்தை நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications