இரட்டை இலை முடக்கத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லையே.. தம்பிதுரை போட்ட போடால் தினகரன் அந்தர் பல்டி!
மத்திய அரசு மீது இடைவிடாமல் குற்றம்சாட்டிய தினகரன் இப்போது அப்படியே அந்தர்பல்டி அடித்து படுபயங்கரமாக பம்மிவிட்டார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கத்துக்கு மத்தியில் ஆளும் பாஜகதான் காரணம் என சரணகோஷம் எழுப்பி வந்த டிடிவி தினகரன் இன்று தடாலடியாக அந்தர் பல்டி அடித்துவிட்டார். இரட்டை இலை முடக்கத்துக்கு ஓபிஎஸ் அணியே காரணம்; மத்திய அரசு இல்லை என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஓபிஎஸ், அதிமுக சசிகலா என இரண்டாக பிளவுபட்டதற்கே மத்திய பாஜக அரசுதான் காரணன்.... அதிமுக கட்சி, கொடி, சின்னம் எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் முடக்கியதும் பாஜகவின் வேலைதான் என பல்லவி பாடிவந்தனர் தினகரன் கோஷ்டி.

எல்லாம் மத்திய அரசுதான்
செய்தியாளர்களிடம் பேசும்போதெல்லாம் மத்திய அரசுதான் இதற்கு காரணம்; மத்திய அரசு எங்களை மிரட்டுகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் தினகரன். இந்த நிலையில் வருமான வரிசோதனையில் விஜயபாஸ்கர் சிக்கினார். இதற்கும் மத்திய அரசு மீது குறைசொன்னார் தினகரன்.

தம்பிதுரை காட்டம்
இந்த நிலையில்தான் இன்று தினகரனை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்; மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான அடக்கி வாசியுங்கள் என அட்வைஸ் செய்தார் தம்பிதுரை.

அதெல்லாம் காரணமில்லை
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் முடக்கத்துக்கு மத்திய அரசு காரணம் அல்ல... இரட்டை இலையை முடக்க வேண்டும் என மனு கொடுத்த ஓபிஎஸ் அணியினர்தான் காரணம் என ஒரேபோடாக பல்டியடித்தார். அதேபோல் விஜயபாஸ்கர் விவகாரத்திலும் மத்திய அரசு பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் தினகரன் வைக்கவில்லை.

பம்மிய தினகரன்
இதுபோன்ற ரெய்டுகள் நடந்தால் சம்மன்கள் வரும்; விசாரணைக்குப் போய் விளக்கம் அளிப்பார்கள்... இதெல்லாம் சகஜம்தான் என அசால்ட்டாக பதிலளித்தார். மத்திய அரசு மீது மறந்தும் கூட எந்த ஒரு குற்றச்சாட்டையும் தினகரன் முன்வைக்காமல் படுபயங்கரமாக பம்மியிருந்தார்.
எல்லாம் தம்பிதுரை எபெக்ட்!












Click it and Unblock the Notifications