சினத்தில் சித்தி... காத்திருக்கும் "திகார்"... அமைச்சர்கள் கைவிரிப்பு.. ராஜினாமாவை நோக்கி தினகரன்?
அதிமுக அமைச்சர்கள் தனக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து அவர் வேறு வழியில்லாமல் துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: அதிமுக அமைச்சர்கள் தனக்கு எதிராக கைகோத்துள்ளதை அடுத்து தினகரன் வேறு வழியில்லாமல் துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 4 மாதங்களாக அதிமுகவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர்.
இ்ந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய இரு கோஷ்டிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

சொந்த காசில் சூனியம்
இதைத் தொடர்ந்து கிட்டதட்ட சுயேச்சை வேட்பாளர் போல் ஆர்கே நகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்து தீயாக வேலை செய்தார் தினகரன். எனினும் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல், வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்தல், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் உள்ளிட்டவற்றால் அவருக்கு நெருக்கமான விஜயபாஸ்கரின் வீட்டிலும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சரத்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இரட்டை இலை யாருக்கு?
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது அச்சின்னத்தை பெற குறுக்கு வழியில் யோசித்து தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் அளிக்க முயற்சித்த வழக்கில் சிக்கியுள்ளார்.

எந்நேரத்திலும் கைது ?
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தினகரனிடம் சம்மன் அளிக்க டெல்லி போலீஸ் சென்னையில் முகாமிட்டுள்ளது. மேலும் தினகரனுக்கு எதிரான சுகேஷுடன் அவர் பேசிய ஆடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் சம்மன் கொடுத்தவுடன் அவரை டெல்லி அழைத்து சென்று விசாரித்து கைது செய்யலாம் என்று தெரிகிறது.

அமைச்சர்கள் ஆலோசனை
இந்நிலையில் அதிமுக இணைய பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பரஸ்பரம் ஓ.பன்னீர் செல்வமும், தம்பிதுரையும் பச்சைக் கொடி காட்டினர். இதைத் தொடர்ந்து தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க் கொடி உயர்த்தியதால் நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனால் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற நிலை உள்ளது.

சித்தி விரட்டினார்
இந்நிலையில் பெங்களூரில் உள்ள சசிகலாவை சந்திக்க தினகரன் நேற்று சென்றார். ஆனால் தினகரனின் செயல்பாடுகளால் கடும் கோபத்தில் இருந்த சசிகலா அவரை சந்திக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் தினகரன் இன்று காலை சென்னை திரும்பினார். இந்நிலையில் தனக்கு ஆதரவாக இருந்த சித்தியும் கோபத்தில் துரத்திவிட்டதாலும், கட்சியினரும் போர்க் கொடி உயர்த்தியதாலும், டெல்லி போலீஸின் கிடுக்கிப்பிடி, பெரா வழக்கு என தினகரனை பல்வேறு வழக்குகள் விரட்டுவதாலும் அவராகவே முன்வந்தோ அல்லது கட்டாயத்தின்பேரிலோ துணை பொதுச் செயலாளர் பதவியை தினகரன் ராஜினாமா செய்யக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications