ஜெ. வீடியோ நவம்பர் மாதமே எடுக்கப்பட்டது.. தினகரன் பரபர தகவல்!
வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா வீடியோ நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்று தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை: ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்த நிலையில், டி.டி.வி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது வீடியோ குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ஜெயலலிதா மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும் அந்த வீடியோ நேற்று தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேட்டு வாங்கிய தினகரன்
வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவால் எடுக்கப்பட்டது. தான் எப்படி இருக்கிறேன், தன்னை சுற்றி என்னென்ன கருவிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாலேயே சசிகலா அந்த வீடியோவை எடுத்ததாகவும், பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் தான் அந்த வீடியோவை கேட்டு வாங்கி வைத்துக்கொண்டதாவும் தெரிவித்து உள்ளார்.

மன உளைச்சல் அடைந்த வெற்றிவேல்
வெற்றிவேல் எனது நண்பர். அவர் கேட்டுக்கொண்டதனாலேயே அந்த வீடியோவைக் கொடுத்தேன். ஆனால், வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டது குறித்து எனக்கோ, எனது உறவினர்களுக்கோ எதுவும் தெரியாது. ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி வருவதாலே மன உளைச்சல் அடைந்து யாருடைய அனுமதியும் இல்லாமல் அந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் என்னை சந்தித்து அந்த விஷயத்தையே சொன்னார்.

மூன்று குழல் துப்பாக்கி
என்னிடம் இந்த வீடியோ இருப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் இருக்கும் அமைச்சர்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் மூன்று குழல் துப்பாக்கி என்று சசிகலாவை விமர்சிப்பதை தாங்கி கொள்ள முடியாததாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது துண்டுப்பிரசுரங்களின் மூலம் எதிர் அணியினர் சசிகலா குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டதாலும் அந்த வீடியோவை வெளியிட வேண்டியதாகி விட்டதாக வெற்றிவேல் தெரிவித்தார் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

நடவடிக்கை எடுக்க முடியாது
ஜெயலலிதா நைட்டியில் இருப்பதாலேயே எக்காரணத்தைக் கொண்டும் அந்த வீடியோவை வெளியிடக்கூடாது என்று சசிகலா நினைத்ததாகவும், அதற்காக தன் மீது எந்த பழி வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், வீடியோ வெளியானது குறித்து குடும்ப உறுப்பினர்கள் வெற்றிவேல் மீது வருத்ததில் இருந்தாலும் அதற்காக விசுவாசியான வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் டி.டி.வி தினகரன் உறுதியாக தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications