இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார்: சொல்கிறார் தம்பிதுரை
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெறுவார் லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெறுவார் லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுக கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரண்டாக சிதைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎ1 தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
மேலும் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டுட் என்றும் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக நாளை இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை எங்களுக்குதான்
இந்நிலையில் அதிமுக எம்பியும் லோக் சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் என அவர் கூறினார். அவர் மேலும் பேசியதாவது,
அதிமுகவுக்குள் பிளவுகள் இல்லை
''அதிமுக பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றாக செயல்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒன்றுபட்டு தான் உள்ளோம். அதிமுக கட்சிக்குள் பிளவுகள் இல்லை.
தினகரன் வெற்றி பெறுவார்
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான். அந்த இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும்.
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது
அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் ஒன்று பட்டு தான் இருக்கிறோம். எங்களுடைய ஒரே குறிக்கோள் தி.மு.க. ஆட்சிக்கு வர கூடாது. இதே காரணத்தால் தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்த்து நின்றார்கள்.
நாங்கள் தான் வெற்றி பெறுவோம்
அந்த உணர்வு, கொள்கை அ.தி.மு.க. தொண்டர்களிடையே உள்ளது. இந்த 4 ஆண்டுகள் மட்டும் இல்லை. எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.'' இவ்வாறு தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.