சசிகலா புஷ்பா குறித்து தூத்துக்குடியே புலம்புகிறது!
தூத்துக்குடி: தூத்துக்குடி மேயரான சசிகலா புஷ்பா சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர். இவர் மீது தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாமல், அதிமுகவினரே கடுமையாக புலம்பிக் குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.
தூத்துக்குடியின் தற்போதேய பரபரப்புப் பேச்சே, இவருக்குப் போய் அம்மா எப்படி எம்.பி. சீட் கொடுத்தார் என்பதுதான். எதிர்க்கட்சியினர் இவர் மீது பல குற்றச்சாட்டுக்களை வைப்பது ஒரு பக்கம் இருக்க,அதிமுகவினரே கூட கடுமையாக இவரது வேட்பாளர் தேர்வை எதிர்க்கின்றனர்.
சொந்தக் கட்சியினரை மதிக்காதவர் சசிகலா புஷ்பா. யாரையும் மதித்துப் பேச மாட்டார். தான்தான் எல்லாம் என்பது போல நடந்து கொள்பவர். அதிகாரிகள் முதற்கொண்டு யாரையும் மதிக்காத இவர் மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கட்சிக்குக் கெட்ட பெயரையும் ஏற்படுத்தியவர் என்று அதிமுகவினரே சொல்கிறார்கள்.
கலெக்டருடன் மோதியவர்
முன்பு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆசிஷ் குமாருடனேயே மோதியவராம் சசிகலா புஷ்பா.
பஸ் ஸ்டாண்ட் விவகாரத்தில்
அதாவது தூத்துக்குடியில், நகருக்கு வெளியே பெரிய அளவில் ஒரு புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது மதுரை, நெல்லையில் உள்ளது பெரிய அளவிலான ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு, நகருக்கு வெளியே ஒரு இடம் பார்க்கப்பட்டது. இடத்தைத் தேர்வு செய்தது அமைச்சராக இருந்த செல்லப்பாண்டியன், ஆட்சித் தலைவராக இருந்த ஆசிஷ் குமார்.
நிராகரித்த சசிகலா புஷ்பா
ஆனால் அந்த இடத்தை முதலில் ஏற்றுக் கொண்ட சசிகலா புஷ்பா பின்னர் அதை நிராகரித்து விட்டாராம். பழைய பஸ் நிலையத்தைத்தான் புதுப்பித்து பெரிதாக்க வேண்டும் என்று கூறி விட்டாராம்.
பெண் ஆணையரிடம் கோபம்
அதேபோல தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஆணையர் மதுமதியிடமும் இவர் கோபத்துடன் சற்று முரட்டுத்தனமாக நடந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யூடியூபில் இந்த வீடியோ இன்னும் கூட உலா வந்தபடி உள்ளது.
மைக்கைக் கொடுங்க...
மாநகராட்சி கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவம் இது. அப்போது ஆணையர் மதுமது ஒரு பிரச்சினையை விளக்கிக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்டு அவருக்கு உத்தரவுகளைப் போடுகிறார். ஒரு கட்டத்தில் மைக்கைக் கொடுங்க என்று கோபத்துடன் பேசியபடி அதிரடியாக மைக்கைப் பிடுங்கி அவர் பேசுகிறார். ஐஏஎஸ் அதிகாரியிடமே இப்படி அவர் நடந்த செயல் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனியர்களை மதிக்காதவர்
இதேபோல கட்சியின் சீனியர்களையும் இவர் மதிப்பது இல்லையாம். துணை மேயர் சேவியர் கட்சியின் ஆரம்ப காலத் தொண்டர். ஆனால் அவரை சசிகலா சுத்தமாக மதிப்பது இல்லை என்று அதிமுகவினரே குமுறுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம், தீர்மானம், திட்டங்கள் தொடர்பாக எதிலுமே அவரிடம் இவர் கலந்து ஆலோசிப்பது இல்லையாம்.
எம்.பி. பதவியே இவரது லட்சியம்
சசிகலா புஷ்பாவின் தீவிர லட்சியமே எம்.பியாகி விட வேண்டும் என்பதுதானாம். இதற்காக அவர் தீவிரமாக பாடுபட்டு வந்தாராம். தற்போது அது கைக்கு அருகில் வந்திருப்பதால் சசிகலாவும், அவரது ஆதரவு வட்டமும் குஷியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தூத்துக்குடியின் ஒட்டுமொத்த அதிமுகவினரும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.