தூத்துக்குடியில் கார்பைடு மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவு துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது.

சுகாதாரமான முறை:
சாதாரணமாக மாம்பழத்தை பறித்து சாக்குகளில் அடைத்து வைத்தால் பழுக்க 15 நாட்கள் ஆகும். இந்த மாம்பழங்கள் சுவையுடனும், சுகாதாரமாகவும் இருக்கும். இந்த முறையில் தான் வீடுகளில் பழுக்க வைப்பார்கள்.

கார்பைடுகல் மாம்பழங்கள்:
ஆனால், வியாபாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பது தான் வழக்கம். இந்த மாம்பழங்களுக்கும் சுவை இருக்கும். ஆனால் இவை உடலுக்கு கேடு விளைவிப்பவை. இது குறித்து புகார் அடிக்கடி அதிகாரிகளுக்கு பறந்து வந்தது.

அதிரடி சோதனை:
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் பழக்கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குடோன்களில் சோதனை:
தூத்துக்குடி-பாளை ரோட்டில் உள்ள கடையிலும், அதன் குடோன்களிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மாங்காய்களுக்கு மத்தியில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சட்ட விரோதமாக ரசாயான முறையில் ஸ்பிரே மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன்னுக்கும் மேலான மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாம்பழங்கள் பறிமுதல்:
இதன் மதிப்பு ரூபாய் 2.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பாதுகாப்பாக தருவைகுளம் செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்குக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

பல்வேறு பாதிப்புகள்:
இந்த பழங்களை சாப்பிடுவதால் குடலில் புண் ஏற்படும். செரிமான கோளாறு உண்டாகும். இப்படி பல்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இது நெல்லை மாவட்டத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications