நீலகிரி, திருச்சியில் கனமழை: மின்னல் தாக்கி இருவர் பலி… 20,000 வாழை மரங்கள் சேதம்
திருச்சி: தமிழ்நாட்டில் கோடைமழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ளது.
திருச்சி அருகே கால்பந்து விளையாடிய போது மின்னல் தாக்கியதில் 2 மாணவர்கள் பலியானார்கள். இதன் மூலம் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் பெய்த கோடை மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களில் புதன்கிழமையன்று ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், சில இடங்களில் பரவலாக லேசான மழையும் பெய்தது.
மதுரையில் பெய்த கோடை மழைக்கு மருத்துவக்கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி பலியானார்.

திருச்சி மாணவர்கள்
திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சலீம் என்பவரது மகன் சவுக்கத்அலி (வயது18), பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளான். அதே தெருவை சேர்ந்த அலாவுதீன் மகன் பைசல் (17) 12-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான்.

விளையாடிய போது விபரீதம்
மாணவர்கள் 2 பேரும் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் நேற்று மாலை 6 மணி அளவில் முனியப்பன் கோவில் மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர்,
அப்போது வானத்தில் மேக கூட்டம் திரண்டு இருண்டு மழை வருவது போன்று காட்சி அளித்து. ரம்மியான சூழ்நிலை நிலவியதால் மாணவர்கள் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பயங்கர சத்தத்துடன் இடி முழக்கம் கேட்டது.

நீலகிரியில் மழை
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பொய்த்துப் போன நிலையில், இந்த ஆண்டு தற்போது கோடை மழைப் பெய்யத் தொடங்கியுள்ளது.

உதகையில் கனமழை
உதகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைப் பெய்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு சிறிதளவு நீங்கும் என்பதாலும், விவசாயத் தேவைக்கு நீர் கிடைக்கும் என்பதாலும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்
சுற்றுலா பயணிகளும் மழையுடன் இயற்கை அழகைக் கண்டுகளித்தனர்.கனமழைக் காரணமாக உதகையில் படகு இல்லத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மரம் விழுந்ததில் சொகுசு வாகனம் ஒன்றும் சேதமடைந்தது.எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வாழைகள் சேதம்
கோபி அருகே உள்ள நம்பியூர், குருமந்தூர், கரட்டுப்பாளையம், நடுப்பாளையம், மூலப்பாளையம், காராப்பாடி, நடுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு லேசான மழையுடன் ஏற்பட்ட சூறாவளி காற்று பலமாக வீசியது.
இந்த காற்றில் குலை தள்ளி நிலையில் நின்ற 20 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சேதம் அடைந்தனர்.

மழை அளவு
மதுரை, தேனி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 60 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணையில் 80 மி.மீட்டரும், மேட்டுப்பட்டியில் 73 மி.மீட்டரும், தேக்கடியில் 69 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

அணை நீர்மட்டம்
இந்த மழையால் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து சிறிதளவு கூடியுள்ளது. ஆனால் வைகை அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. பெரியாறு அணையின் நீர்மட்டம் 109.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications