எழும்பூர் கோர்ட்டில் கட்டி உருண்ட இரண்டு பெண்கள் – கைகலப்பால் பரபரப்பு!
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இரண்டு பெண்கள் கைகலப்பிலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் சுப்ரியா. இவர் சமீம் என்ற பெண்மணியிடம் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதனையடுத்து சமீம் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலான விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்க இருந்தது. அதற்காக ஆஜராக வந்த சுப்ரியாவுடன் கோர்ட் வளாகத்திலேயே சமீம் வாய்த்தகராறில் ஈடுபட்டார்.
அது பின்னர் கைகலப்பாக மாறியது. இரு பெண்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். கட்டிப் புரண்டு அவர்கள் போட்ட சண்டையால் கோர்ட் வளாகமே கலகலத்துப்போனது. இதையடுத்து வழக்கறிஞர்களும், பொதுமக்களும் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.
சர்ச்சைகள் களமாக மாறும் எழும்பூர் கோர்ட்:
சென்னை எழும்பூர் எப்போதுமே சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பெயர் போனதாகும். இங்கு பலமுறை வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன. சில வக்கீல்கள் கொலையே செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட வக்கீல்கள் சங்கத் தலைவர் தேர்தலின்போது வன்முறை வெடித்து ஸ்டாலின் என்ற வக்கீல் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இரு பெண்களுக்கு இடையே இன்று மோதல் வெடித்து சண்டையில் முடிந்துள்ளது.