ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை கிடைக்குமா? - ஒபிஎஸ் வீட்டில் ஆலோசனை
இரட்டை இலை சின்னம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னை வீனஸ் காலனி வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் சசிகலா அணியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அவைத் தலைவர் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

ஓபிஎஸ் - சசிகலா அணி மனு
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் அணியினர் கடந்த 15ஆம் தேதி, தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதற்கு பதிலளித்த சசிகலா தரப்பினர், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ஆவணங்கள் தாக்கல்
ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 6,000 பேர் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை, தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு நேற்று தாக்கல் செய்தது.

தேர்தல் ஆணையம் முன் விளக்கம்
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று நடத்தும் இறுதி விசாரணையில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆலோசனை
இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வீனஸ் காலனி வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் இடைத்தேர்தலில் என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications