பொள்ளாச்சி 2 மாணவிகள் பலாத்காரம்: ஆறுதல் கூறச்சென்ற சப் கலெக்டர் மயக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஆறுதல் கூறச்சென்ற சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மருத்துவமனையில் மயங்கிவிழுந்தார்.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் சர்ச் அருகே இந்த விடுதி உள்ளது. பாழடைந்த மண்டபம்போல் காட்சியளிக்கும் இந்த விடுதியில் 17 மாணவர்கள், 3 மாணவிகள் உள்ளனர். இங்கு 2 நபர்கள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். மிரட்டி, 10 மற்றும் 11 வயது உள்ள 2 மாணவிகளை கடத்தி சென்றனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
உடலில் ரத்த காயங்களுடன் அழுது கொண்டே 2 மாணவிகளும் விடுதிக்கு திரும்பினர். விவரம் தெரிந்ததும் விடுத நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த விடுதியில் ஐ.ஜி., தேவஆசீர்வாதம், எஸ்.பி., சுதாகர் விசாரித்து வருகின்றனர். சில குளூ கிடைத்திருப்பதாவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இன்று காலை 9.30 மணி அளவில் சப்.கலெக்டர் ரஷ்மி சித்தார்த், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் அவர் ஆறுதல் கூறினார். மாணவிகளின் நிலைமையைப்பார்த்த சப்-கலெக்டர் அப்படியே மயங்கி விழுந்தார்.
அங்கு நின்று கொண்டிருந்த டாக்டர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவர் டாக்டர்களிடம் 2 மாணவிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று மாணவிகளிடம் விசாரித்தனர். மாணவிகளுக்கு ஆறுதல் கூறிய அவர்கள் உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர்.