பிறந்த குழந்தைகளை காட்ட லஞ்சம்.. அரசு மருத்துவமனையில் 2 பேர் சஸ்பெண்ட்!
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை காட்ட லஞ்சம் கேட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை காட்ட லஞ்சம் கேட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை பெற மாவட்ட தலைநகரான நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரவச வார்டில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாளை பரிசுத்த ஆவி தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பணம் கேட்டு நர்சுகள் நச்சரிப்பதாக சுகாதார துறை செயலாளர் மற்றும் அமைச்சருக்கு மனு அனுப்பினார். அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் பிரசவத்திற்காக கடந்த 30ம் தேதி நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எனது மருமகளை சேர்த்தோம்.
அங்கு பிரவசம் பார்த்த இரு செவிலியர்கள் எனது மனைவியிடம் ரூ.1000 கேட்டு நச்சரித்தனர். நாங்கள் பணம் கொண்டு வரவில்லை என்றவுடன் யாரிடமாவது கடன் வாங்கி தாருங்கள் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து டீனிடம் புகார் செய்தேன். ஆனால் அவர் விசாரிக்கிறேன் என்று கூறி அனுப்பி விட்டார். இது மோசடித்தனமாக இருக்கிறது. அரசு மருத்துவ கல்லூரி அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்படும் போது ஏன் பணம்கொடுக்க வேண்டும்.
இதுகுறித்து விசாரித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது வாட்ஸ் ஆப்பிலும் பரவி வருகிறது.
இதுகுறித்து டீன் கூறும்போது நடந்த சம்பவம் வீடியோவில் இருப்பதால் செவியிலர் பேச்சியம்மாள் மற்றும் செல்வியிடம் விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்டதால் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் நர்சுகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.