சென்னையில் தொடரும் கல்லூரி மாணவர்கள் மோதல்- பேருந்து கண்ணாடிகள் சேதம் உடைப்பு; ஒருவர் காயம்!
சென்னை: சென்னை பெரம்பூரில் மாநிலக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் நேற்று ஏற்பட்ட மோதலில் இளைஞர் மண்டை உடைந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தினை ஏற்படுத்தியது.
பெரம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மாநிலக் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். மேலும், அங்கு கிடந்த கற்களை இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வீசினர். இதைப் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், அங்கிருந்த ஒரு பேருந்தின் 6 கண்ணாடிகள் உடைந்தன. மேலும் அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரின் மண்டை உடைந்தது. இதற்கிடையே மாணவர்களின் மோதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இச் சம்பவம் தொடர்பாக கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் வஜ்ரவேல், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications