அணுமின் நிலையத்தில் பாகங்கள் தரமாக இல்லாததே விபத்துக்கு காரணம்: உதயகுமார்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மின்உற்பத்தியானது 900 மெகாவாட்டை எட்டியுள்ளது. அணு உலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலாவது அணுஉலையில் திடீரென வெப்பநீர் செல்லும் குழாய் வெடித்தது. இதனால் குழாயில் இருந்து பீறிட்டு வெளியேறிய கொதிநீர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் மீது பட்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 6 பேரும் உடனடியாக அணுமின்நிலைய வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் கூடங்குளம் போலீசார் அணுமின்நிலையத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூடங்குளம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளருமான உதயகுமார், ‘அணுமின் நிலையத்தில் பாகங்கள் தரமில்லாததே விபத்துக்கு காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்துக்கு அரசோ, அணுசக்தி கழகமோ இன்னும் பொறுப்பேற்கவில்லை என்றும் விபத்து குறித்து எத்தரப்பையும் சாராத விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும், அணுமின் நிலையத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications