கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து- 6 பேர் படுகாயம்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நீராவிக் குழாய் வெடித்து கொதிநீர் வெளியேறியதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கூடங்குளத்தில் 2 அணு அலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அணு உலையில் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அண்மையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலையில் மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது நீராவிக் குழாய் திடீரென வெடித்தது.
இந்த நீராவிக் குழாய் திடீரென வெடித்ததால் கொதிநீர் வெளியேறியது. இந்த கொதிநீர் வெளியேறிய போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் அணு மின் நிலைய ஊழியர்கள், மூவர் ஒப்பந்த தொழிலாளிகள்.
இவர்கள் அனைவரும் முதலில் அணுமின் நிலைய வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர், இது விபத்து அல்ல. ஒரு சம்பவம் மட்டுமே என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.