மகளிர் உரிமைத் தொகை.. உதயநிதி ஸ்டாலினின் காரை திடீரென வழிமறித்த பெண்கள்.. தென்காசியில் பரபரப்பு
தென்காசி: மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வரின் மகனே என்ற பதாகையுடன் காத்திருந்த பெண்கள், உதயநிதி ஸ்டாலினின் காரை வழிமறித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்து குமுறலை வெளிப்படுத்தினர் இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், வரும் (செப்) 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முதல் முதலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.63 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ள நிலையில் இதில் சுமார் 1 கோடி பெண்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என தெரிகிறது. தற்போது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் தகுதியுள்ளவர்கள் பட்டியல் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
தற்போது மகளிர் உதவித் தொகை தருவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதால், பலரது விண்ணப்பங்களுக்கு முறையாக விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றும் தங்களுக்கு வருமா, வராதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். பலருக்கும் விண்ணப்பம் வாங்கப்பட்டது குறித்த எஸ்எம்எஸ் வரவில்லை என்றும் புகார் உள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தென்காசி நகராட்சி அருகே காரில் வந்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினை, 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ராசப்பா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வழிமறித்தனர்.
தாங்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தபோதும், முறையான விசாரணை வரவில்லை. மகளிர் உரிமை தொகை பெற 100% தகுதியானவர்களான தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக "மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வரின் மகனே" என்ற பதாகையுடன் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தான் இதுபற்றி பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.இதனால் தென்காசியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications