இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்.. உதயநிதி ஸ்டாலின், ஆர்பி உதயகுமார் அஞ்சலி.. பரபரப்பில் பரமக்குடி!
பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்து இருக்கின்றனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
இந்த நிலையில் திமுக சார்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவாஸ் கனி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், எம்பி-க்களும் அஞ்சலி செலுத்தினர்.

சிறப்பான வரவேற்பு
அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர்பி உதயகுமார் அஞ்சலி
இதேபோல் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்த வருவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க 3 டிஐஜி, 24 மாவட்ட எஸ்பி, 26 ஏடிஎஸ்பி, 60 டிஎஸ்பி ஆகியோருடன் 5,500 காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு பணிகள் தீவிரம்
அதேபோல, நெடுஞ்சாலைகளில் 40க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பரமகுடி நகர் பகுதியில் மட்டும் 150 சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோர்கள் அவர்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து வரக்கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications