20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம்.. அரசு அதிரடி அறிவிப்பு
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய விதிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பான இரண்டு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்படி 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த கட்டணமும் புதிய விதிப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளைநிலைத்தை சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக்குவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அங்கீகாரமில்லாத விளை நிலங்களைப் பத்திரப்பதிவுசெய்யத் தடை விதித்தது.இந்தத் தடையை எதிர்த்து ரியல் எஸ்டேட் அதிபர்கள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2016 அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்தது. இந்தத் தடை நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தியது தற்காலிகமே என்று கூறியது. மேலும் மறு உத்தரவு வரும் வரை பத்திரப்பதிவுசெய்ய இடைக்காலத் தடை தொடரும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசு ஒப்புதல்
இதனிடையே உயர்நீதிமன்றத்தில் நேற்று அங்கீகாரமில்லாத நிலங்களைப் பத்திரப்பதிவுசெய்ய கொண்டுவரப்பட்ட புதிய விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாதுரை தெரிவித்தார். திட்டத்தை முழு வடிவில் அரசாணையாகத் தாக்கல்செய்ய ஒருநாள் அவகாசம் தேவை என்றும் அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
2 அரசாணை தாக்கல்
இதனிடையே அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரிய துறை சார்பில் இரண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய வரைவு விதிகளுடன் அரசாணையை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
விலக்கு அளிப்பு
அதன்படி 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய நிலத்திற்கு அனுமதியில்லை
அதன்படி தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது. விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண் இயக்குனரின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீட்டுமனையாக மாற்றக்கூடாது.
கோயில் நிலம்- மாற்ற முடியாது
இதேபோல் கோயில் நிலங்கள், வக்ஃபு வாரிய நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது. உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை என புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதி விற்பனை செய்து வேறு பகுதி விற்பனை செய்யாவிட்டால் பத்திரப்பதிவு செய்யலாம் என அறிவிப்பட்டுள்ளது.
ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்
சந்தை விலையை விட 3% அபாரதத்துடன் புதிய விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு மனையாக்க விண்ணப்பிக்கப்படும் இடத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைமுறைப்படுத்த கட்டணம்
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த கட்டணமும் புதிய விதிப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 100 ரூபாயும் நகராட்சிகளில் 60 ரூபாயும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்தினால் நிலங்கள் வரைமுறை செய்து தரப்படும்
வளர்ச்சிக்கட்டணமும் நிர்ணயம்
மாநகராட்சி பகுதியில் வரையரை செய்ய வளர்ச்சிக்கட்டணமாக 600 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு, தேர்வு நிலை நகராட்சி பகுதியில் வளர்ச்சிகட்டணம் 350 ரூபாயும் முதல் நிலை, இரண்டாம் நிலை நகராட்சிகளில் வளர்ச்சிக்கட்டணம் 250 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் 150 ரூபாயும் ஊராட்சிகளில் 100 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.