காஷ்மீர் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகள்தான் காரணம்- என ஒப்புக் கொண்டது மத்திய அரசு- கார்கே
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை சம்பவத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள்தான் காரணம் என்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் அதிமுக்கியமான பிரச்சனை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி ஏன் வரவில்லை? என்றும் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: மத்திய அரசாங்கம் அனைத்து கட்சி அரசியல் கூட்டத்தைக் கூட்டும் போது, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதமர் அதில் பங்கேற்க வேண்டும். ஆனால் காஷ்மீர் படுகொலை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது சரியானது அல்ல.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரதமர் மோடியோ, பீகார் மாநிலத்துக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்ய முடிகிறது. ஆனால் டெல்லிக்கு வந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்து இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ, என்னதான் ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்பதை விளக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏன் பிரதமர் மோடி செய்யவில்லை? எப்படி இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது? யார்தான் இந்த சம்பவத்துக்குப் பொறுப்பு? பாதுகாப்பு குறைபாடா? உளவுத்துறையின் குறைபாடா? காவல்துறையின் தோல்வியா? என்பதை அனைத்து கட்சிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா. ஆனால் அப்படிச் செய்யவில்லையே.. பிரதமர் மோடியே வரவில்லை.. பிறகு எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்?
டெல்லி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருக்கிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புக் கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினோம். இனிவரும் நாட்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாது என அமித்ஷா உறுதியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் கூட, பொதுமக்களைப் பாதுகாக்க முடியவில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த பிரச்சனையில் அரசாங்கத்துக்கு முழு ஆதரவை நாம் தருகிறோம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.












Click it and Unblock the Notifications