ஜாஃபர் சேட் மீது ஊழல் வழக்கு: மத்திய அரசு அனுமதி மறுப்பு!
சென்னை: முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாஃபர் சேட்டுக்கு எதிராக ஊழல் வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஜாஃபர் சேட். இவர் பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஜாஃபர் சேட் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது.

இந்த ஊழல் வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் 750 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக ஜாஃபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதை ரத்து செய்ய கோரி ஜாஃபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு வழக்குரைஞர் பவானி சுப்புராவ் ஆஜராகி மத்திய அரசின் ஆணை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதில், ''தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு மனை வாங்கியதில் 1.49 கோடி ரூபாய் ஏமாற்றியதாக ஐ.பி.எஸ். அதிகாரி ஜாஃபர் சேட் உள்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதில், ஐ.பி.எஸ். அதிகாரி ஜாஃபர் சேட்டு மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியிருந்தது.
ஜாஃபர் சேட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க முடியாது" என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 2014 ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications