ஜெ. மரணத்தில் மர்மம் இல்லை.. வெங்கையா நாயுடு பரபரப்பு பேட்டி! கவுதமி கடிதத்திற்கு இதுதான் பதிலா?
ஜெயலலிதா மறைவில் மர்மம் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி விவாதம் வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிப்பது தவறானது ஆகும். ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
சிகிச்சை பலனின்றி திடீரென ஜெயலலிதா மரணமடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக யாராவது கூறினால் அதற்கான உறுதியான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும். ஆதாரங்களை வெளியிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார் வெங்கையா நாயுடு.
மத்திய அமைச்சரின் இந்த பேட்டி மூலம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகிவரும் சர்ச்சைகள் குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை என்று தெரிகிறது.
ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதி வைத்தியநாதன், இதுகுறித்த வழக்கை விசாரித்தபோது, தனக்கும் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறினார். ஜெயலலிதா உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டிருப்பேன் என்று நீதிபதி எச்சரிக்கை செய்தார்.
நடிகை கவுதமி, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால், வெங்கையா நாயுடுவின் பேட்டியை வைத்து பார்த்தால் கவுதமி கடிதத்திற்கு இதுதான் பதில் என தெரிகிறது.