விவசாய குடும்பத்தில் பிறந்து ஐஏஎஸ் தேர்வில் சாதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதாப் முருகன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார் பிரதாப் முருகன்.
விருதுநகர்: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார் பிரதாப் முருகன். இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் இந்திய அளவில் 27வது இடமும், தமிழக அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகத்தில் இத்தேர்வை 18,000 பேர் எழுதினர். இந்த முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.
15,700 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1500 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான மெயின் தேர்வு டிசம்பர் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடந்தது.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்
இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 3,000 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 210 மாணவ-மாணவிகள் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு வெளியிட்டது. இதில், அகில இந்திய அளவில் ஆண்கள் 846 பேர், பெண்கள் 253 பேர் என மொத்தம் 1099 பேர் இந்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நந்தினி முதலிடம்
அகில இந்திய அளவில் கர்நாடகத்தை சேர்ந்த கே.ஆர்.நந்தினி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஆர்எஸ்சில் தேர்வு பெற்று பயிற்சி உள்ள நந்தினிக்கு ஐஏஎஸ் ஆவதுதான் கனவு. மூன்றாவது முறையாக தேர்வெழுதி இப்போது வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் சாதனை
தமிழகத்தில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் அகில இந்திய அளவில் 21வது இடமும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் இந்திய அளவில் 27வது இடமும், தமிழக அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

84 பேர் தேர்ச்சி
தமிழகத்தில் மட்டும் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய பெங்களூரை சேர்ந்த நவின்பட் 3வது இடத்தையும், கொல்லத்தை சேர்ந்த அனு 4வது இடமும், திருப்பூரை சேர்ந்த அக்ஷய் ஸ்ரீதர் 5வது இடம் பிடித்துள்ளனர்.

விவசாய குடும்பம்
முதலிடம் பிடித்துள்ள பிரதாப் முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பில் பிறந்தவர். 5ஆம் வகுப்பு வரை வத்திராயிருப்பில் படித்த அவர், 6 முதல் 10 வரை திருநெல்வேலி பள்ளியில் படித்துள்ளார். மேல்நிலை பள்ளியை மதுரை டிவிஎஸ் பள்ளியில் படித்துள்ளார்.

உள்ளூர்வாசிகள் கொண்டாட்டம்
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பிடெக் கெமிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ள அவர், டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்றுள்ளார். இப்போது இந்திய அளவில் 21வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். முதல்முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பிரதாப் முருகன் சாதனையை பட்டாசு வெடித்து வத்திராயிருப்புவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications