ஓ.பி.எஸ். அணியின் உண்ணாவிரதம் வெறும் கண்துடைப்பு நாடகம்.. வைகைச் செல்வன் தாக்கு
ஓ.பி.எஸ். அணியின் உண்ணாவிரதம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று வைகை செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியின் உண்ணாவிரத அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்து 3 மாதம் ஆகியுள்ள நிலையில் அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கக்கோரி அழுத்தம் அதிகரித்து வருகிறது.
சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்போது காபந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். இதையடுத்து சசிகலா ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது.
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு ஜெயலலிதா மரணம் விவகாரத்தை முழுவதுமாக கையிலெடுத்துள்ளது. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன், பி.எச்.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு ஆளும் கட்சி தரப்பிலும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து பொதுமக்களிடமும் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே வருகிற 8-ஆம் தேதி ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் உண்ணாவிரத அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்களை அளித்து, திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இந்நேரத்தில், தான்தோன்றித் தனமான கருத்துக்களை வெளியிடுவதை ஓ.பி.எஸ் அணியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சைகளில் சந்தேகம் இருந்தால், அப்போது உளவுத்துறையை தன்வசம் வைத்திருந்த ஓ.பி.எஸ் தான் முதல் குற்றவாளி என்று தெரிவித்துள்ள வைகைச் செல்வன், இதை அவர் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.