முல்லை பெரியாறு அணையில் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
தேனி: முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி செய்கிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளா மாநில கம்யுனிஸ்ட் எம்.எல்.ஏ. பிஜூமோள் நேற்று முல்லை பெரியாறு அணைக்கு சென்று அங்கிருந்த பராமரிப்பு பொறியாளர் மாதவனை தாக்கினார். இந்த விவகாரம் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைக்காக நானும் கம்பம் அப்பாசும், கட்சி, சாதி, மதம் கடந்து ஒவ்வொரு கிராமமாக விளக்கி அதை புரிய வைத்தோம்.
அப்படிப்பட்ட முல்லை பெரியாறு அணையில் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது 142 அடியை தண்ணீர் எட்டும் சூழலில், அதை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி செய்து தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இதற்கு காரணம், இந்த அறிய சந்தர்ப்பத்தை தங்கள் தலைவர் வந்து பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது தான்.
அதுமட்டுமல்லாமல் இன்று தமிழக பொறியாளர் தாக்கப்பட்டதை, அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல் காவல் துறையை வைத்து கூற வைத்துள்ளார்கள். இதன் முலம் தமிழக மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய விடாமல் தடுக்கிறார்கள். இதற்கும் தமிழக அரசுதான் காரணம்.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என முன்பிருந்தே நான் கூறி வருகிறேன். கேரளா மக்கள் நமக்கு எதிரி அல்ல, ஆனால் அங்குள்ள அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு எதிராக பிரச்னையை கிளப்பி வருகிறார்கள். இதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இந்நாட்டின் குடிமகன். எனக்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை இருக்கிறது. ஆனால், தமிழக காவல் துறை என்னை எல்லா இடங்களிலும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது" என்றார்.