வைரமுத்துவை மிரட்டவோ, கேடு விளைவிக்கவோ கனவிலும் நினைக்காதீர்.. வைகோ கண்டனம்
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்துகளுக்கு அவரை மிரட்டிவிடலாம் என்றும் , அவருக்கு கேடு விளைவிக்கலாம் என்றும் கனவிலும் நினைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக வைரமுத்துவை ஆளாளுக்கு மிரட்டி வருகின்றனர். ஆனால் அவருக்கு கேடு விளைவிக்க யாரும் கனவு கூட காண முடியாது என்று மதிமுத பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஒரு நாளிதழ் நடத்திய விழாவில் கலந்து கொண்டு ஆண்டாள் குறித்து அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனங்கள் எழுந்தவுடன் அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். இருந்தாலும் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.
அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறி முறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவையாகும்.
அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து.
விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியப் பணியாற்றிவரும் நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக்கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும்.
ஆனால், கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும், நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications