பாலுமகேந்திரா மரணம்; கலை உலகுக்கு பேரிழப்பு: வைகோ இரங்கல்
சென்னை: சினிமா மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் பாலுமகேந்திரா மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிறந்த மனிதாபிமானியான பாலுமகேந்திரா இன்று மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
ஈழத்தில் மட்டக்களப்பு அருகில் அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த இவர், தமிழ் உணர்வு மிக்கவர். இலண்டனில் தனது இளநிலை கல்வியை முடித்தபின், புனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றபோது, தங்கப்பதக்கம் பெற்றவர்.
இயற்கை அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டி பிரமிக்க வைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாலுமகேந்திரா ஆவார்.
நெல்லு மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து, அப்படத்துக்கு கேரள மாநில அரசின் விருதினைப் பெற்றார். இதுவரை பார்த்திராத கோணங்களில் காட்சிகளைத் தந்து கண்களுக்கு விருந்தளித்தார். மூன்றாம் பிறை, மூடுபனி திரைப்படங்களைத் தந்து புகழ்பெற்றார்.
டைரக்டரின் பெயரைப் பார்த்து சினிமாவுக்குச் செல்லும் இரசிகர்களின் பட்டியலில் பாலுமகேந்திரா முதலிடம் பெற்றிருந்தார்.
டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலுமகேந்திரா.
பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
சினிமா மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் பாலுமகேந்திரா மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு ஆகும்.
பாலுமகேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சினிமா கலை உலகுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.