தமிழகத்தில் கூட்டணியை ஆட்சியை ஏற்படுத்தப்போவது 'செல்போன் சிங்கங்கள்'.... வைகோ நம்பிக்கை
திருப்போரூர்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தப் போவது இளம்சிங்கங்கள், செல்போன் சிங்கங்கள்தான் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
தமிழக முதல்வர் நாற்காலியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்காருவது உறுதி. குருவி கூடு கட்டுவது போல ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வீடு கட்டுவது போல இந்த கூட்டணியை உருவாக்க பாடுபட்டுள்ளேன்.
இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்க பாடுபடுவேனா? அல்லது நான் ஜெயிப்பதை பார்ப்பேனா? படையின் சேனாதிபதியாக இருந்து இக்கூட்டணியை ஜெயிக்க வைப்பேன்.
ஈழத் தமிழர், முல்லைப் பெரியாறு, மதுவிலக்கு என பல பிரச்சனைகளுக்காக 5 ஆயிரம் கி.மீட்டர் நடைபயணம், மத்திய பிரதேசத்தில் ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் என தமிழ்மக்களுக்காக தமிழ் நாட்டுக்காக பல்வேறு பேராட்டங்களை செய்துள்ளேன். அனைத்துக்கும் போராடுகிற ஒரு ஊழியனாக உங்களில் ஒருவனாக உள்ளேன்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த மாற்றத்தை ஏற்படுத்த இளம் சிங்கங்கள், செல்போன் சிங்கங்களால் தான் முடியும், இந்த கூட்டணி 150 இடங்களில் ஜெயிக்கும், இந்த மாற்றம் 100 ஆண்டுகளுக்கு பேசப்படும்.
இவ்வாறு வைகோ பேசினார்.