பூவிருந்தவல்லி நகர செயலாளர், துணை செயலாளர் சஸ்பெண்ட்: வைகோ நடவடிக்கை
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா.சங்கர், துணைச்செயலாளர் முருகன் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுகவில் இருந்து மூன்று மாவட்ட செயலாளர்கள், கட்சி பொருப்பாளர்கள் பலர் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே இன்னும் பலர் திமுகவிற்கு தாவுவார்கள் என்று கூறப்படும் நிலையில் இன்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர செயலாளர் சங்கர், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்கு அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் தலைமைக்கழகம் எற்றுக்கொள்ளும் வகையில் அமையாவிடில் இருவரும் நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து ஏற்கனவே பலர் வெளியேறி வரும் நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சிலரை கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விடுவித்து வருகிறார் வைகோ.