மோடி பிரதமராக அதிமுகவுக்கு ஓட்டுப் போட சொல்வது அயோக்கியத்தனம்: வைகோ
நாகர்கோவில்: மோடி பிரதமராக அதிமுகவுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று அக்கட்சியினர் பிரசாரம் செய்வது அயோக்கியத்தனமானது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்த வைகோ நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நரேந்திரமோடி அலை அடிக்கிற இத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான இக்கூட்டணியில் தி.மு.க., அ.தி.மு.க. பங்கு வகிக்காத ஒரு சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாறுதல் வரப்போகிறது.
தமிழக தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒரு உபாயத்தை கையாள்கிறது. அது மோசடியான உபாயம். நான் பல இடங்களில் பிரசாரம் செய்து வருகிறேன். பல இடங்களில் அ.தி.மு.க.வினர் மோடி பிரதமராக வரவேண்டும் என்றால் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். இது பித்தலாட்டம். அயோக்கியத்தனம்.
அ.தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை மட்டுமே நம்பி உள்ளனர்.
எனவே மக்கள் மோடி பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாகவும், விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள். இந்த தேர்தல், தமிழக அரசியலின் எதிர்கால மகத்தான மாறுதலுக்கு அடையாளமாக இருந்து வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களை குழப்போ குழப்பு என்று குழப்புகிறார். அவர் பேசும்போது நாங்கள் அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால் என்கிறார். அவரது அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்கள் பேசும்போது ஜெயலலிதா பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள். சில கட்சிகளை சேர்த்து, கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ் ஆதரவோடு பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications