7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு: வைகோ, திருமா, பழ.நெடுமாறன், சீமான் வரவேற்பு !
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ , தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். 7 பேரை விடுவிக்கும் விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில்,தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியபோதும், 7 பேரையும் விடுதலை செய்வதற்கான இந்த முயற்சியை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருப்பது அவர்கள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது. மேலும் அரசியல் சட்டவிதி 161 ஐ பயன்படுத்தி மாநில அரசே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.











Click it and Unblock the Notifications