சசிகலா புஷ்பா மூலம் ஜெ.வை மிரட்டுகிறார் வைகுண்டராஜன்... சகோதரர் குமரேசன் அதிரடி
சென்னை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி தமிழக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் தொழிலதிபர் வைகுண்டராஜன் மிரட்டுவதாக அவரது சகோதரர் குமரேசன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக தில்லாக சசிகலா புஷ்பா செயல்படுவதற்கு காரணமே வைகுண்டராஜன்தான் என கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார் வைகுண்டராஜன். இதற்காகவே நியூஸ் 7 என்ற டிவி சேனலையும் அவர் தொடங்கினார்.

இந்த நிலையில் திருச்சி சிவா எம்.பி.யைத் தாக்கிய விவகாரத்தில் சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் சசிகலா புஷ்பாவோ ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கதறி அழ நாடே அதிர்ந்தது.
ஜெயலலிதாவின் உத்தரவை மீறி சசிகலா புஷ்பா தொடர்ந்து செயல்பட்டு வருவதன் பின்னணியில் விவி மினரல்ஸ் தொழிலதிபர் வைகுண்டராஜன் இருப்பதாக கூறப்பட்டது. அத்துடன் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட அதிமுகவினரை அவர் வளைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, சட்டவிரோதமாக 50 லட்சம் டன் தாது மணலை வெளிநாடுகளுக்கு வைகுண்டராஜன் ஏற்றுமதி செய்துள்ளார்; இதனால் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறினார்.
மேலும், சசிகலா புஷ்பாவுக்கு அனைத்து உதவிகளையும் வைகுண்டராஜன்தான் செய்து தருகிறார். சசிகலா புஷ்பாவை வைத்து முதல்வர் ஜெயலலிதாவையும் அரசாங்கத்தையும் மிரட்டுகிறார் வைகுண்டராஜன்.
சசிகலா புஷ்பாவை மூலமாக ஒட்டுமொத்த நாடார் சமூகத்தை தமக்கு ஆதரவாக திருப்புவதற்கும் முயற்சிக்கிறார் என கூறினார்.
வைகுண்டராஜனின் சகோதரரே சசிகலா புஷ்பாவுக்கு அவர்தான் உதவி செய்கிறார் என பகிரங்கமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications